எந்தன் வியப்பு!!

பச்சைக் கிளிக்கு சிவந்த மூக்கை
செதுக்கி வைத்தவர் யாரோ?
பாடும் குயிலுக்கு இனிய குரலை
கொடுத்து வைத்தவர் யாரோ?
அழகிய மானுக்கு புள்ளிகள் வைத்து
அழகு செய்தவர் யாரோ?
ஆடும் மயிலுக்கு அழகாய் தொகையை
பின்னி வைத்தவர் யாரோ?
மலைகளில் மகிழ்வுடன் மரங்களை கொண்டு
இறக்கி வைத்தவர் யாரோ?
மாண்புடன் தரைகளில் பச்சை புல்லை
பரப்பி வைத்தவர் யாரோ?
கனிவுடன் சொற்களில் இனிமையை நமக்கு
கலந்து வைத்தவர் யாரோ?
களிப்புடன் உண்ணும் உணவின் சுவையை
கூட்டி வைத்தவர் யாரோ?
கயல் விழிதனிலே ஒளியினை வைத்து
காண வைத்தவர் யாரோ?
தாயேனும் உணர்வினில் அன்பினைக் கொட்டி
தேக்கி வைத்தவர் யாரோ?
தானாய் கனிந்திடும் கனியினில் தனியொரு
சுவையினைக் கலந்து வைத்தவர் யாரோ?
கருவினில் சேயையும் கல்லினுள் தேரையும்
கருத்துடன் வளர்ப்பவர் யாரோ?
வீணையில் நாதமும்,மலரினில் வாசமும்
வழங்கிய வள்ளல் யாரோ?
இயற்கை அழகை வாரி வழங்கி
இன்பம் தந்தவன் எவனோ
இன்னும் தருவான் என்றும் தருவான்
ஏற்றி அவன் தாள் பணிவோம்.

Comments

Popular posts from this blog

சொல்விளையாட்டு 1

சொல்விளையாட்டு 3

விடுகதைகள் (ஒன்று)